பூட்டியிருந்த வீட்டை உடைத்து 53 பவுன் தங்கநகை கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை

காரியாபட்டி அருகே பூட்டியிருந்த வீட்டை உடைத்து 53 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பூட்டியிருந்த வீட்டை உடைத்து 53 பவுன் தங்கநகை கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை
Published on

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே தோணுகால் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 58). இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் குற்றாலத்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

இந்நிலையில் பாலசுப்பிரமணியனின் உறவினர் ஒருவர் பூட்டியிருந்த வீட்டைப் பார்ப்பதற்காக சென்றுள்ளார்.அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவர் உடனடியாக மல்லாங்கிணறு போலீசாருக்கும், பாலசுப்பிரமணியனுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.தகவல் அறிந்து வந்த மல்லாங்கிணறு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.

சுற்றுலாவை பாதியில் முடித்து வீட்டிற்கு திரும்பிய பாலசுப்பிரமணியன் மற்றும் குடும்பத்தார் வீட்டில் தங்கநகைகள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் ஆளில்லாத வீட்டை நோட்டம் பார்த்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பின்பக்க கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்றுள்ளனர். மேலும்,வீட்டில் இருந்த இரண்டு பீரோக்களை உடைத்து அதிலிருந்து சுமார் 53 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.ஆளில்லாத வீட்டை நோட்டம் பார்த்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com