

திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் சேங்காளிபுரம் எம்ஜிஆர் நகரில் வசித்து வருபவர் திருமுருகன். இவரது மனைவி மனைவி சுதா, மகன் சுமன், மகள் பியாஸ். திருமுருகன் அருகில் உள்ள செங்கல் சூளையில் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை திருமுருகன் குடும்பத்தினருடன் வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டின் கதவை உடைத்தது. கதவு உடைக்கப்படும் சத்தத்தை கேட்டு திருமுருகன் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது கண் இமைக்கும் நேரம் உள்ளே புகுந்த அந்த கும்பல் மனைவி, மகள் கண் முன்னே திருமுருகனை சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
இதைபார்த்து அலறிய அவர்கள் அந்த கும்பலை தடுக்க முயன்றது. ஆனால் அவர்களையும் அந்த கும்பல் தாக்கியது.இதில் திருமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி சுதா படுகாயமடைந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த குடவாசல் போலீசார் திருமுருகனின் உடலை கைப்பற்றி தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே மருத்துவமனையில் சுதாவும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்விரோதமா?, தொழில் போட்டியா? என குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து வலைவீசி தேடிவருகின்றனர். இதற்கிடையில், செங்கல் சூளை மேஸ்திரி வெட்டிக்கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல் சூளை மேஸ்திரி கொலை செய்யப்பட்டதை கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மனைவி, மகள் கண் முன்னே செங்கல் சூளை மேஸ்திரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.