திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை

திருமணமான 4 மாதத்தில் புதுபெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
Published on

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் அகூர் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 20). இவரும் செருக்கனுர் கிராமத்தை சேர்ந்த மாலினி (18) என்பவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்துக்கு மாலினியின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இவர்கள் அகூர் கிராமத்தில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த மாலினி வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாலினியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாலினின் தந்தை முனுசாமி தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் மாலினியின் உறவினர்கள் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷை சந்தித்து சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.

திருமணம் ஆகி 4 மாதங்கள் ஆவதால் திருத்தணி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. திருமணமாகிய 4 மாதங்களில் புதுபெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com