

சென்னை,
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நேற்று முன்தினம் (ஆகஸ்டு 5) தாக்கல் செய்யப்பட்டது. நேற்று (ஆகஸ்டு 6) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடியதும் முதலில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட இருக்கிறது. தொடர்ந்து, மறைந்த முக்கிய பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட உள்ளது.
அதன்பின்னர், கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. கேள்வி நேரம் முடிந்ததும் 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்குகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச இருக்கிறார்கள். உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளுக்கு நிதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் பதில் அளிப்பார்கள்.
அடுத்த 2 நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை ஆகும். தொடர்ந்து, 10 மற்றும் 11-ந் தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. 12-ந் தேதி பொது விவாதத்திற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் பேச இருக்கின்றனர்.
ஆகஸ்டு 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. முதல் நாளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகியவை எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.
பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட இருக்கும் நிலையில், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மேகதாது அணை விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளன.