கொள்ளையடிக்க சென்ற வியாபாரியின் வீட்டில் பிரியாணி சமைத்து சாப்பிட்ட திருடர்கள்

வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடிக்க சென்ற வியாபாரியின் வீட்டில் பிரியாணி சமைத்து சாப்பிட்ட திருடர்கள், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், மோட்டார்சைக்கிளை திருடி சென்றனர்.
கொள்ளையடிக்க சென்ற வியாபாரியின் வீட்டில் பிரியாணி சமைத்து சாப்பிட்ட திருடர்கள்
Published on

வேலூர்,

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள சென்னாம்பேட்டை தக்கடி தெருவை சேர்ந்தவர் பாரூக் (வயது 50). தோல் வியாபாரி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் பெங்களூருவுக்கு சென்று இருந்தார். நேற்று காலை அத்தெருவின் வழியாக நடந்து சென்றவர்கள் பாரூக் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டிற்குள் எட்டி பார்த்தனர். அப்போது வீடு முழுவதும் பொருட்கள் சிதறிக் கிடந்தன.

இதுகுறித்து அவர்கள் வாணியம்பாடி டவுன் போலீசாருக்கும், வீட்டின் உரிமையாளர் பாரூக்குக்கும் தகவல் அளித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது பீரோவில் இருந்த நகைகள் திருடப்பட்டிருந்தது. வெளியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளையும் காணவில்லை.

சமையலறைக்கு சென்றபோது அங்கு உணவு தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. காய்கறிகளும் வெட்டப்பட்டிருந்தது. அங்கு சமைத்து மீதம் வைத்திருந்த பிரியாணி இருந்தது. எனவே வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பிரியாணி தயாரித்து சாப்பிட்டுவிட்டு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், மோட்டார்சைக்கிளை திருடிக்கொண்டு தப்பியது தெரியவந்தது. கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com