

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் முடிந்த கடந்த மாதம் (மே) 4-ந்தேதி முடிவுகள் வெளியானது. அதில் த.வெ.க. கட்சி வெற்றி பெற்றது. கடந்த மாதம் 10-ந்தேதி முதல்-அமைச்சராக விஜய் மற்றும் சில அமைச்சர்கள் பதவியேற்றனர். அதனைத் தொடர்ந்து 23 த.வெ.க. மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். அதன் பின்னர் வி.சி.க. மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் தற்போது புதிதாக அமைந்திருக்கும் த.வெ.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் அமைச்சரவை கூட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் கூட்டியுள்ளார். இந்நிலையில் இந்த கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கியது. இதன்படி ‘வெற்றி தமிழகம்’ என்ற பெயரில் தவெக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம், முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நிதி, தொழில்முதலீடு சார்ந்த திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பட்ஜெட், கவர்னர் உரை, மேகதாது, டாஸ்மாக், நிதி குறித்த வெள்ளை அறிக்கை, மகளிருக்கான ரூ.2500 குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “விவசாயிகள் மேம்பாடு, பெண்கள் மேம்பாடு, இளைஞர்கள் மேம்பாடு, லஞ்சமற்ற தமிழகம் உள்ளிட்ட 436 திட்டங்களை அமைச்சரவை கூட்டத்தில் முதல்-அமைச்சர் முன் வைத்தார்” என்று தெரிவித்தார்.