

தேனி மாவட்டம் கூடலூர் 8-வது வார்டு காமராஜகவுடர் தெருவை சேர்ந்தவர் தேவா (வயது 39). தனியார் கேபிள் டி.வி ஊழியர். அவருடைய மனைவி கற்பகம் (35). இவர்களுக்கு மானஷா (16) என்ற மகள் உள்ளார். தேவா, மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதை பார்த்த மகள் மானஷா, வெறுப்பு அடைந்து வீட்டில் இருந்த பினாயிலை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மகள் பினாயில் குடித்ததால் மனமுடைந்த தேவா, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கூடலூர் தெற்கு போலீசார் அங்கு சென்று தேவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். மேலும் இது தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.