வாடகை வீட்டின் படுக்கை அறையில் கேமரா: பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்த உரிமையாளரின் மகன்...

வாடகை வீட்டின் படுக்கை அறைக்குள் பேனா கேமராவை பொருத்தி இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்திருப்பது தெரியவந்தது.
வாடகை வீட்டின் படுக்கை அறையில் கேமரா: பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்த உரிமையாளரின் மகன்...
Published on

சென்னை,

சென்னை ராயபுரம் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், வாடகை வீட்டில் வசித்து வருகிறார். 2-வது தளத்தில் உள்ள வீட்டில் கணவர் மற்றும் 9 வயது மகனுடன் குடியிருக்கும் அந்த பெண்ணின் கணவர், கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர்களது வீட்டின் படுக்கை அறையில் புதிதாக பேனா ஒன்று இருந்ததை இளம்பெண் பார்த்தார். அதில் கேமரா இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி வேலைக்கு சென்றிருந்த தனது கணவரிடம் செல்போன் மூலம் தெரிவித்தார். அவர் வீட்டுக்கு விரைந்து சென்று பேனா கேமராவை ஆய்வு செய்தார்.

அதில் தனது மனைவி உடை மாற்றும் காட்சிகளும், மேலும் பல ஆபாச வீடியோக்களும் பதிவாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி ராயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் சய்தார். இன்ஸ்பெக்டர் ரஜினிஸ் இதுதொடர்பாக விசாரணை நடத்தினார்.

அப்போது அவர்கள் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரின் மகனான இப்ராகிம்(வயது 35), இவர்களது வீட்டின் படுக்கை அறையில் பேனா கேமராவை பொருத்தி விட்டு செல்வது அந்த பேனா கேமராவில் பதிவாகி இருந்தது. மேலும் இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ பதிவு செய்திருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து இப்ராகிமை போலீசார் கைது செய்தனர். பல் டாக்டரான அவர், சென்னை காசிமேடு பகுதியில் பல் ஆஸ்பத்திரி வைத்து நடத்தி வருவதுடன், சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் எம்.டி.எஸ். இறுதியாண்டும் படித்து வருகிறார். இன்னும் அவருக்கு திருமணம் ஆகவில்லை.

இவர், வாடகைக்கு குடியிருந்த இளம்பெண்ணின் வீட்டின் படுக்கை அறைக்குள் யாருக்கும் தெரியாமல் புகுந்து பேனா கேமராவை பொருத்தி இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்திருப்பது தெரியவந்தது. அவர் மீது 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கைதான இப்ராகிமை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com