தோல்வி பயத்தாலே வருமான வரித்துறை ஏவப்படுகிறது -கனிமொழி குற்றச்சாட்டு

தோல்வி பயம் காரணமாகவே வருமான வரித்துறை ஏவப்படுகிறது என கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
தோல்வி பயத்தாலே வருமான வரித்துறை ஏவப்படுகிறது -கனிமொழி குற்றச்சாட்டு
Published on

தூத்துக்குடியில் கனிமொழியின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் எதுவும் சிக்கவில்லை. இதுதொடர்பாக கனிமொழி பேசுகையில், நாடு முழுவதும் எதிர்க்கட்சியினரை குறிவைத்து சோதனை நடத்தப்படுகிறது. தேர்தல் ஆணையம் அதிமுக, பா.ஜனதா மீதான புகார் மீது நடவடிக்கை எடுப்பது கிடையாது. எதிர்க்கட்சியினரை அச்சுறுத்த, அவர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்த தோல்வி பயத்தால் இதுபோன்று வருமான வரித்துறையை ஏவி விடுகிறார்கள்.

எந்தஒரு ஆவணமும் இல்லாமல் ரெய்டு நடக்கிறது. வேட்பாளருக்கு எதிரான ரெய்டு என்கிறார்கள். வேட்பாளர் என்பதற்காக யார் வேண்டுமானாலும் வீட்டுக்குள் நுழைந்து சோதனை நடத்தலாமா? எப்படியாவது பழிவாங்க வேண்டும், கெட்டப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என சோதனை நடக்கிறது. தமிழிசை மற்றும் அதிமுகவினர் வீட்டில் பணம் உள்ளது, ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லையே என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதில் கிடையாது. இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மேற்கொள்ளப்படும் சோதனையாகும். வாக்காளர்களிடம் கேட்பது தமிழகத்தை காப்பாற்றுங்கள் என்றுதான் எனக்கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com