

கன்னியாகுமரி,
குமரி மாவட்டம் குளச்சல் மாதா காலனியைச் சேர்ந்தவர் மரிய விபலிஸ் (வயது 42). இவர் வெளிநாட்டில் உள்ள ஒரு ஆயில் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஹெப்சி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மரிய விபலிஸ் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் விடுமுறையில் ஊருக்கு வந்தார்.
இந்த நிலையில் ஹெப்சி குழந்தைகளுடன் கேரள மாநிலம் விழிஞ்ஞத்தில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்றிருந்தார். இதனால் நேற்று முன்தினம் இரவு மரிய விபலிஸ் தனது மனைவி, குழந்தைகளை அழைத்து வர காரில் புறப்பட்டார்.
மார்த்தாண்டம் அருகே கொல்லங்கோடு வெங்குளம் பகுதியில் சென்றபோது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் உள்ள குளத்துக்குள் பாய்ந்தது.
தகவலறிந்த கொல்லங்கோடு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சுமார் மணிநேர போராட்டத்துக்கு பிறகு கார் கண்ணாடியை உடைத்து மயங்கிய நிலையில் இருந்த மரிய விபலிசை காருடன் மீட்டனர். உடனே, அவரை சிகிச்சைக்காக பாறசாலையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மரிய விபலிஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.