

காட்பாடி
பழ மூட்டைகளை அதிகளவு ஏற்றியதால் ரெயில் என்ஜின் மீது சரக்கு பெட்டி மோதியது. இதனால் காட்பாடியில் இருந்து 45 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.
பழ மூட்டைகள்
பெங்களூருவில் இருந்து அசாம் மாநிலத்திற்கு செல்லும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று சென்னை நோக்கி புறப்பட்டது. ரெயில் என்ஜினுக்கு அடுத்து உள்ள பொருட்கள் இருப்பு வைக்கும் சரக்கு பெட்டியில் பழம் நிரப்பப்பட்ட பெட்டிகள் மற்றும் பழ மூட்டைகள் ஏற்றப்பட்டது.
அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றப்பட்டதால், ரெயிலை இயக்கிய போது எஞ்ஜின் மீது சரக்கு பெட்டி மோதி ஒன்றோடு ஒன்று உரசியது. இதனால் ரெயில் மெதுவாக நகர்ந்து சென்றது. இதனை ரெயில் என்ஜின் டிரைவர் ஆய்வு செய்தார் அப்போது சரக்கு பெட்டியில் பழமூட்டைகள் அதிகம் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஜோலார்பேட்டையை கடந்து வரும்போது என்ஜின் டிரைவர் காட்பாடி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
பாதி மூட்டைகள் இறக்கம்
அதன்படி இன்று அதிகாலை 3 மணிக்கு கவுகாத்தி எக்ஸ்பிரஸ் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்ததும் நிறுத்தப்பட்டது.
அப்போது தயார் நிலையில் இருந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சரக்கு பெட்டியில் இருந்த பழ மூட்டைகளை பாதி இறக்கினர். இதனையடுத்து ரெயில் 45 நிமிடங்கள் காலதாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இந்த சம்பவம் காட்பாடி ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.