தேவையின்றி ரெயில் அபாய சங்கிலியை இழுத்த 1,369 பேர் மீது வழக்கு

தேவையின்றி ரெயில் அபாய சங்கிலியை இழுத்த 1,369 பேர் மீது வழக்கு ரூ.7 லட்சம் அபராதம் வசூல்.
தேவையின்றி ரெயில் அபாய சங்கிலியை இழுத்த 1,369 பேர் மீது வழக்கு
Published on

சென்னை,

ரெயில் பயணத்தின் போது பயணிகளின் பாதுகாப்பு வசதிக்காக ஒவ்வொரு பெட்டியிலும் அபாய சங்கிலி பொருத்தப்பட்டிருக்கும். அதனை இழுக்கும் போது ரெயில் டிரைவருக்கு அபாய எச்சரிக்கை எழுப்பப்பட்டு, ரெயிலை நிறுத்தி பாதிக்கப்பட்ட பயணிக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகள் தேவையின்றி ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுக்கக்கூடாது என தெற்கு ரெயில்வே பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பயணிகள் காரணமின்றி ஓடும் ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுப்பதை தவிர்க்க வேண்டும். ஆபத்து காலங்களில் மட்டுமே பயணிகள் அபாய சங்கிலியை பயன்படுத்த வேண்டும். தேவையில்லாமல் அபாய சங்கிலியை இழுப்பவர்களுக்கு ரெயில்வே சட்டப்படி ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.

தெற்கு ரெயில்வேயில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை ஓடும் ரெயிலில் தேவையில்லாமல் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தவர்கள் மீது 1,369 வழக்குகள் போடப்பட்டுள்ளது. இதில் 1,043 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.7 லட்சத்து 11 ஆயிரத்து 66 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com