நிபந்தனையுடன் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி மீதான வழக்கு ரத்து; ஐகோர்ட்டு தீர்ப்பு


நிபந்தனையுடன் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி மீதான வழக்கு ரத்து; ஐகோர்ட்டு தீர்ப்பு
x

அமைச்சர் கே.என். நேருவின் தம்பிக்கு எதிரான வழக்கில் ரூ.30 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

சென்னை,

இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு பதினைந்து லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து பெற்ற 30 கோடி ரூபாய் கடனை சகோதர நிறுவனங்களுக்கு திருப்பி விட்டதால், 22 கோடியே 48 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் இயக்குனராக உள்ள நிறுவனத்துக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.

இதனடிப்படையில் அமைச்சர் நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மீது 2021ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறை சோதனை மேற்கொண்டது.

இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்க துறை சார்பில், சிபிஐ வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்க துறை வழக்கு பதிவு செய்துள்ளதால், சிபிஐ வழக்கை ரத்து செய்யக்கோரும் வழக்கில் தங்களையும் இணைத்து கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு ரவிச்சந்திரன் தரப்பில், கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்,இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, "இந்த வழக்கில் மோசடி எதுவும் நடக்கவில்லை. மோசடியில் அரசு அதிகாரிகளும் சம்மந்தப்படவில்லை. அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரருக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கிறேன். இதில் ரூ.15 லட்சத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கும், ரூ.15 லட்சத்தை தமிழ்நாடு சமரச தீர்வு மையத்திற்கும் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் வழக்கை ரத்து செய்கிறேன்" என்று கூறியுள்ளார்.

1 More update

Next Story