

சென்னை,
கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், ரயில்களில் கேட்டரிங் எனப்படும் நடமாடும் உணவு வழங்கல் சேவையையும் ரயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்தது. இந்நிலையில் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளதால், நடமாடும் உணவு வழங்கல் சேவைக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரி இந்திய ரயில்வே டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ள புதிய டெண்டரை ரத்து செய்து, உணவு வழங்கல் சேவைக்காக கடந்த முறை உரிமம் பெற்றுள்ளவர்களையே அனுமதிக்க வேண்டும் எனக் கோரி இந்திய ரயில்வே நடமாடும் உணவு வழங்குவோர் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கொரோனா ஊரடங்கால் ரயில்வே உணவு வழங்கல் சேவை பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு, அவர்களின் சேவையை மீண்டும் தொடங்குவது தொடர்பாக 4 வாரங்களில் பரிசீலித்து தகுந்த முடிவை ரயில்வே நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.