சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
Published on

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த செப்டம்பர் 16-ந்தேதி நடைபெற்ற அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, மதிப்பெண் முறைகேடு காரணமாக ரத்து செய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து இருப்பது, அ.தி.மு.க. ஆட்சியில் எந்தளவிற்கு பணியாளர் நியமனங்களில் ஊழல் மலிந்து இருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது. விடைத்தாள்களில் மதிப்பெண்கள் திருத்தப்பட்டு இருக்கின்ற மிகப்பெரிய மோசடி, ஏதோ ஒருசில ஊழியர்கள் மட்டத்தில் மட்டுமே நடைபெற்று விட்டது என்று சொல்வது நம்பக்கூடியதாக இல்லை.

காரணம், தேர்வு முடிவுகளில் 130, 139, 146, 149 என அதிக மதிப்பெண் எடுத்து, சான்றிதழ்கள் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றவர்களின் மதிப்பெண்கள் 45, 48, 54 என குறைந்து இருப்பதும், ஏறத்தாழ 200 பேரின் மதிப்பெண்களில் நடைபெற்றுள்ள அதிர்ச்சியளிக்கும் குளறுபடிகளும் வெளிப்பட்டு, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஊழல் சந்தி சிரித்தது.

லஞ்சம் கொடுத்து விரிவுரையாளர் பதவி பெற முயன்ற, இந்த மிகப்பெரிய ஊழல் வழக்கினை, சி.பி.சி.ஐ.டி. பிரிவு விசாரணைக்கோ அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கோ கடைசி வரை மாற்றவில்லை. சென்னை மாநகர காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய குற்றப்பிரிவு மட்டுமே விசாரணை நடத்தி, கீழ்மட்டத்தில் உள்ள ஊழியர்கள் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்களே தவிர, மாபெரும் மதிப்பெண் ஊழலுக்குத் துணை போன உயரதிகாரிகளையோ, அதில் சம்பந்தப்பட்ட முக்கிய நிறுவனங்களையோ அல்லது ஆளுங்கட்சியினரையோ தொடவில்லை.

நேர்மையான முறையில் தேர்வெழுதி வெற்றி பெற்றவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்பட்டுள்ளது. 1,058 விரிவுரையாளர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்வில், 1.33 லட்சம் பேர் கலந்துகொண்டு தேர்வெழுதியுள்ள நிலையில், முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்களின் தேர்வை ரத்து செய்வதை தவிர்த்துவிட்டு, நேர்மையாக தேர்வு எழுதியவர்களின் முடிவுகளை மட்டும் வெளியிட்டிருக்க வேண்டிய ஆசிரியர் தேர்வு வாரியம், இப்படி ஒட்டுமொத்தமாக தேர்வை ரத்து செய்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

156 பேருடைய தேர்வுத்தாளில்தான் முறைகேடா அல்லது 1,058 பதவிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்ட அனைத்து தேர்வுத்தாளிலும் முறைகேடு நடந்திருக்கிறதா என்பதை அ.தி.மு.க. அரசு உடனே வெளியிட வேண்டும்.

ஒட்டு மொத்தமாக பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கான தேர்வுகளை ரத்து செய்வதற்கு பதிலாக, முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் நியமனங்களை மட்டும் ரத்து செய்துவிட்டு, நேர்மையாக தேர்வு எழுதியவர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற அ.தி.மு.க. அரசு முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல், சென்னை மாநகர காவல்துறையிடம் உள்ள மிகப்பெரிய இந்த ஊழல் வழக்கை, சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி, இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு வேலை வாய்ப்பில் விபரீத ஊழலுக்கு துணை போன அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com