

ஆவடி அடுத்த திருநின்றவூர் தாசர்புரம் முதல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் வனஜா (வயது 60). இவர் தனது தங்கை நிர்மலாவுடன் நேற்று காலை தாம்பரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் திடீரென வனஜாவின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்தனர். இதையடுத்து மூதாட்டி வனஜா சங்கிலியை கையில் பிடித்துக் கொண்டு சத்தம் போடவே சங்கிலி துண்டாகி கையில் கிடைத்த 2 பவுன் நகையுடன் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து வனஜா கொடுத்த புகாரின் பேரில், திருநின்றவூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி.கேமராவில் பதிவான மர்ம நபர்களின் உருவத்தை வைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.