தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக மழை குறைந்திருந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் பரவலாக மழைபெய்ய தொடங்கி இருக்கிறது. நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி, தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்றும் (திங்கட்கிழமை) மழைக்கான வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், விருதுநகர், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் இன்று மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

மேலும், சேலம், தர்மபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ஏற்காடு, பாப்பிரெட்டிப்பட்டி தலா 8 செ.மீ., மேட்டூர் 7 செ.மீ., பேரையூர், ஸ்ரீவில்லிபுத்தூர், செட்டிக்குளம் தலா 6 செ.மீ., சேலம், ஆரணி, ராஜபாளையம், நிலக்கோட்டை, மயிலம்பட்டி தலா 4 செ.மீ. உள்பட பல இடங்களில் மழைபெய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com