

சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக பகுதிகளில் 1.5 முதல் 3.1 கி.மீ. உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும், மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வெப்பநிலையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு தென் மேற்கு திசையிலிருந்து தரைக்காற்று வீச வாய்ப்ப்புள்ளதால் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள மாவட்டங்களில் தற்போது நிலவும் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உஅயர்க்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.