தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டலத்தின் மேலடுக்கில் நிலவும் சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாமதமாக முடிவடைந்த நிலையில், இயல்பான மழை அளவை விட அதிக மழை கிடைத்து இருந்தது. பருவமழை நிறைவு பெற்ற பிறகு, பெரிய அளவில் மழை இல்லை. பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவுகிறது. அவ்வப்போது ஏதாவது ஒரு சில இடங்களில் மட்டும் லேசான சாரல் மழை பெய்து வந்தது.

இந்த நிலையில், வளிமண்டலத்தின் மேலடுக்கில் நிலவும் சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வளிமண்டல மேலடுக்கின் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் சுழற்சி காரணமாக, இன்று (வெள்ளிக்கிழமை) தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (சனிக்கிழமை) தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) அந்த பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com