

சென்னை,
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவி வருதால் தமிழகத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
ஒடிசா மற்றும் மேற்கு வங்காள கடலோரப் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவிற்கு இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மத்திய மேற்கு வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல், ஒடிசா மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.