

நிலவின் தென் துருவ பகுதியை இதுவரை எந்த நாடும் ஆராய்ந்தது இல்லை. அந்த வேலையை, ரூ.1,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் சந்திரயான்-2 விண்கலம் செய்யப்போகிறது.
இந்த விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த 15-ந்தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. கவுண்ட்டவுனும் நடந்து வந்தது. ஆனால் ராக்கெட்டில் ஏற்பட்ட திடீர் கோளாறால் கடைசி நிமிடத்தில் சந்திரயான்-2 விண்கலத்தை ஏவுவது நிறுத்தப்பட்டது.
தற்போது அந்த கோளாறை விஞ்ஞானிகளும், என்ஜினீயர்களும் சரி செய்து விட்டனர். இதையடுத்து வரும் 22-ந்தேதி சந்திரயான்-2 விண்கலத்துடன், ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
இதுபற்றி இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், சந்திரயான்-2 நாளை மதியம் 2.43 மணிக்கு விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் இன்று மாலை 6.43 மணிக்கு தொடங்குகிறது.
தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. இனிமேல் தொழில்நுட்ப கோளாறு நடப்பதற்கான சாத்தியமே இல்லை என அவர் கூறியுள்ளார்.
சந்திரயான்-1 நீர் மூலக்கூறு இருப்பதை கண்டறிந்தது போல் சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படுவதை உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருகின்றன. சந்திரயான்-2 ஏவுகணை நாளை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும் என சிவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.