

சென்னை,
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக கியாஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்துள்ளது. அதன்படி, மாதத்தின் முதல் நாளான நேற்று வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்படி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 993 உயர்த்தப்பட்டு ரூ. 3 ஆயிரத்து 237க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை, சிலிண்டர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி அவற்றை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அந்த வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார், சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 கியாஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நீலமேகம், குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.