சென்னை: மர குடோனில் பயங்கர தீ விபத்து

இந்த தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான மரக்கட்டைகள் தீயில் எரிந்து சேதமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மர குடோனில் பயங்கர தீ விபத்து
Published on

சென்னை,

சென்னை, கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகர் பகுதியில் ஜெகன் என்பவருக்கு சொந்தமான மர குடோன் உள்ளது. இந்த குடோனில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.30 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து அந்த பகுதி மக்கள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொருக்குப்பேட்டை தீயணைப்புத்துறையினர், 3 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்கட்ட விசாரணையில், நேற்று விடுமுறை நாள் என்பதால் குடோனில் ஊழியர்கள் யாரும் இல்லை. குடோனுக்கு அருகில் இருந்த மற்றொரு கடையில், கட்டிடப் பணிகள் நடந்து வந்துள்ளது. அப்போது கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், வெல்டிங் செய்து கொண்டிருந்தபோது அந்த தீப்பொறியானது மரத்துகள் சேகரிக்கப்பட்டு இருந்த பகுதியில் விழுந்து இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

சுமார் 20 டன் மரக்கட்டைகள் குடோனில் சேகரிக்கப்பட்டு இருந்த நிலையில், ரூ.15 லட்சம் மதிப்பிலான மரக்கட்டைகள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com