

சென்னை,
வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார். இதன்படி பெரம்பலூர், எழும்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர், வில்லிவாக்கம் பகுதிகளை பார்வையிட்ட அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொட்டும் மழையில் நிவாரணப் பொருட்களை வழங்கினார். மு.க.ஸ்டாலினுடன், திமுக எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்ட முக்கிய திமுக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.