

சென்னை
சென்னை மாநகராட்சி மேயராக பிரியா உள்ளார். இந்த நிலையில், இருவேறு பள்ளி நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டபோது குத்து விளக்கு ஏற்றுவதில் சர்ச்சை ஏற்பட்டது. இதன்படி, புளியந்தோப்பு உருது நடுநிலைப்பள்ளி கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டு மேயர் பிரியா, குத்துவிளக்கு ஏற்றினார்.
இதன்பின்னர் அதனை அருகே நின்றிருந்த எம்.எல்.ஏ. பல்லவியிடம் தராமல், அவருக்கு அடுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் கொடுத்தது சர்ச்சையானது. மெழுகுவர்த்தியை வாங்க எம்.எல்.ஏ. பல்லவி முற்பட்டபோது, அதனை, மேயர் பிரியா அவரிடம் கொடுக்கவில்லை. இதனால், நிகழ்ச்சியில் இருந்து உடனடியாக எம்.எல்.ஏ. பல்லவி வெளியேறினார்.
இதேபோன்று, அடுத்து நம்மாழ்வார்பேட்டை சுப்பராயன் தொடக்கப்பள்ளி நிகழ்ச்சியில் மற்றொரு நிகழ்ச்சி நடந்தது. இதில், மேயர் பிரியா குத்துவிளக்கை ஏற்றிவிட்டு எம்.எல்.ஏ. பல்லவியிடம் மெழுகுவர்த்தியை கொடுத்தபோது அதனை அவர் வாங்க மறுத்து விட்டார். தொடர்ந்து குத்துவிளக்கை ஏற்ற வற்புறுத்தியபோதும் அதனை அவர் மறுத்து விட்டார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.