

சென்னை,
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று ஒருநாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்னை வந்தார். ஐஎன்.எஸ் கடற்படை தளத்தில் இருந்து நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு சாலை மார்க்கமாக வந்த பிரதமர் மோடிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சாலையின் இருபுறங்களிலும் நின்ற அதிமுக, பாஜக தொண்டர்கள் கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடியும் மக்களை பார்த்து காரில் இருந்தபடியே கை அசைத்தார். இதையடுத்து, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அவர், சென்னை வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே ரூ.3,770 கோடி செலவில் சென்னை மெட்ரோ ரெயில் முதல்கட்ட விரிவாக்க திட்டம், ரூ.293.40 கோடி செலவில், சென்னை கடற்கரை-அத்திபட்டு இடையே 21.1 கி.மீ. நீளமுள்ள 4-வது ரெயில் பாதை இணைப்பு, ரூ.423 கோடி மதிப்பீட்டில் விழுப்புரம்-கடலூர், மயிலாடுதுறை-தஞ்சை மற்றும் மயிலாடுதுறை-திருவாரூர் இடையே 228 கி.மீ. தொலைவுக்கு மின்மயமாக்கப்பட்டு உள்ள ஒருவழி ரெயில் பாதை ஆகிய முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார்.
ரூ.2,640 கோடி செலவில் கல்லணை கால்வாய் விரிவாக்கம், புதுப்பிப்பு மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்துக்கும், சென்னை தையூரில் ரூ.1,000 கோடி செலவில் ஐ.ஐ.டி.க்காக அமைக்கப்பட உள்ள டிஸ்கவரி கேம்பஸ் வளாகம் அமைப்பதற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். சென்னை ஆவடி ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அர்ஜூன் போர் பீரங்கியை இந்திய ராணுவத்துக்கு அர்ப்பணித்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், மத்திய-மாநில அரசின் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.