சென்னை தலைமைச் செயலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் அறையில் யாகம் நடந்தது உண்மையா? பரபரப்பு தகவல்கள்

சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறையில் யாகம் நடந்தது உண்மையா? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை தலைமைச் செயலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் அறையில் யாகம் நடந்தது உண்மையா? பரபரப்பு தகவல்கள்
Published on

சென்னை,

சென்னையில் தமிழக அரசின் தலைமைச் செயலகம் இயங்கி வரும் புனித ஜார்ஜ் கோட்டையில் முதல் தளத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அறை உள்ளது. இந்த அறையில் வாஸ்து சாஸ்திரப்படி சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல், மேலும் சில அமைச்சர்களின் அறைகளும் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறையில் இந்த பணிகள் நிறைவடைந்ததால், பவுர்ணமி தினமான நேற்று அதிகாலையில் அவரது அறையில் யாக பூஜைகள் நடத்தப்பட்டுள்ளன. அதிகாலை முதலே நடந்த இந்த பூஜை காலை 8 மணிக்கு நிறைவடைந்துள்ளது. இந்த பூஜையில் காலை 7.15 மணி முதல் 8 மணி வரை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டிருக்கிறார்.

இதற்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் அறைக்கு செல்லும்போது முதலில் ஒரு ஹால் அமைந்திருக்கும். அந்த ஹால் வழியாகத்தான் அவரது அறைக்கு செல்ல முடியும். தற்போது, அதில் வாஸ்து சாஸ்திர முறைப்படி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவர் அமர்ந்திருக்கும் இடமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இனி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது அறைக்கு நேராக செல்ல முடியும்.

மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறையில் நடந்த பூஜைகள் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார். இதனால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com