சென்னை ஸ்டான்லி மற்றும் தருமபுரி மருத்துவக்கல்லூரிகள் தொடர்ந்து இயங்க அனுமதி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை ஸ்டான்லி மற்றும் தருமபுரி மருத்துவக்கல்லூரிகள் தொடர்ந்து இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஸ்டான்லி மற்றும் தருமபுரி மருத்துவக்கல்லூரிகள் தொடர்ந்து இயங்க அனுமதி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on

சென்னை,

சைதாப்பேட்டையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மருத்துவ மையத்தை ஆய்வு செய்த பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் தருமபுரி மருத்துவக்கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்படுவதாக முன்பு அனுப்பப்பட்ட நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டது. தற்போது சென்னை ஸ்டான்லி மற்றும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான அங்கீகார ரத்து சான்று திரும்பப் பெறப்பட்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ கல்லூரிகள் மூடப்படுவது போன்ற மாயத்தோற்றம் உருவாக்கப்பட்டது. மருத்துவ கல்லூரிகளில் சிசிடிவி, பயோமெட்ரிக் போன்ற குறைபாடுகள் சரி செய்யப்பட்டுள்ளன.அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஓரிரு சிறு குறைகளும் சரி செய்யப்பட்டு அறிக்கை வழங்கப்பட்டது. தேசிய மருத்துவ ஆணைய குழுவினர் நேற்று கல்லூரிகளுக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்தனர்.

மருத்துவ இடங்களுக்கு பொது கலந்தாய்வு வரைவு மத்திய அரசு அனுப்பியது; இதற்கு, கலந்தாய்வு மாநில உரிமை சார்ந்தது என குறிப்பிட்டு ஆட்சேபனை தெரிவித்து கடிதம் அனுப்பபட்டது. பொது கலந்தாய்வு இல்லை எனவும் மாநில அரசுகளே கலந்தாய்வு நடத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com