எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

வரலாற்றாய்வாளர் வேங்கடாசலபதி, விருது பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Published on

சென்னை,

2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களின் பட்டியல் இன்று வெளியாகியிருக்கிறது. மொத்தம் 24 மொழிகளில் 21 மொழிகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எட்டு கவிதைத் தொகுப்புகள், மூன்று நாவல்கள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், மூன்று கட்டுரைகள், மூன்று இலக்கிய விமர்சன நூல்கள் மற்றும் ஒரு நாடகம் ஆகியவற்றுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வரலாற்றுப் பேராசிரியர், எழுத்தாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908 என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுடன் 1 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது.

இந்தநிலையில், சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

நாற்பதாண்டுகளாகக் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களைப் பற்றிய ஆய்வில் மூழ்கி, அதன் விளைச்சலாக # சுதேசிஸ்டீம் நூலை ஏ.ஆர்.வி சலபதி அவர்கள் கொண்டு வந்துள்ள வேளையில், அவரது "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908" நூல் #சாகித்ய அகாடமி விருது பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. கலகம் என்று அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் குறிப்பிட்டதைத் திருத்தி, நம் 'எழுச்சி' எனப் பதிவுசெய்த வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்களுக்கு என் வாழ்த்துகள்! பாராட்டுகள்! என பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com