தங்கம் வென்ற மாரியப்பனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

நான்கு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம் என மொத்தம் பத்து பதக்கங்களுடன் புள்ளிகள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
தங்கம் வென்ற மாரியப்பனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Published on

சென்னை,

மாற்று திறனாளிகளுக்கான பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் நாட்டின் கோபே நகரில் நடைபெற்று வருகின்றன.

மே 17-ம் தேதி துவங்கிய பாரா ஒலிம்பிக் போட்டிகள் மே 25-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் இந்தியா சார்பில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பாரா தடகள வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி பெண்களுக்கான 400 மீட்டர் டி20 பிரிவில் இந்தியாவுக்கான முதல் தங்க பதக்கத்தை வென்றார். இவரைத் தொடர்ந்து ஓட்டப்பந்தய வீராங்கனை பிரீத்தி பால், உயரம் தாண்டுதல் வீரர் நிஷாத் குமார் முறையே வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

இவர்கள் வரிசையில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகள் அடிப்படையில் இந்தியா நான்கு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம் என மொத்தம் பத்து பதக்கங்களுடன் புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், உலக பாரா தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "ஜப்பானின் கோபியில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதலில் டி63 போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்துகள். வருங்காலத்தில் இன்னும் பெரிய உயரங்களை எட்டுவோம்" என்று அதில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com