

சென்னை,
சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி. ராஜா சமூகநீதி மாணவர் விடுதியில் நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மாணவர்களிடம் குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்தார். அப்போது, விடுதியில் இருக்கும் குறைகள் மற்றும் தேவைகளை முதல்-அமைச்சரிடம் வேதனையுடன் மாணவர்கள் எடுத்துரைத்தனர்.
குறிப்பாக, உடற்கல்வி ஆசிரியரை நியமிக்க வேண்டும். நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும். உணவின் தரத்தை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் முதல்-அமைச்சரிடம் மாணவர்கள் வழங்கினர். மாணவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, பல மாற்றங்கள் விடுதியில் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து, சமூகநீதித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கும் வகையில் விடுதியின் உணவுப் பட்டியல் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இட்லி, சப்பாத்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், மூடப்பட்டிருந்த வாலிபால் மைதானம் மாணவர்கள் பயன்படுத்த திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இரவு 12 மணி வரை விடுதிக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். முதல்-அமைச்சர் விஜய்யின் ஆய்வுக்கு அடுத்த நாளே மாணவர்கள் முன்வைத்த கோரிக்கைகளில் சிலவற்றுக்கு உடனடி தீர்வு காணப்பட்டிருப்பது, மாணவர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.