முதல்-அமைச்சர் விஜய் கரூர் வருகை; கியூ.ஆர். கோடுடன் கூடிய அடையாள அட்டை வினியோகம்

5 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில், கட்சி நிர்வாகிகள் சார்பில் இந்த அடையாள அட்டைகள் வினியோகிக்கப்பட்டு உள்ளன.
முதல்-அமைச்சர் விஜய்
Published on

சென்னை

தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் கரூர் வருகையையொட்டி கியூ.ஆர். கோடுடன் கூடிய அடையாள அட்டைகள் வினியோகிக்கப்பட்டன.

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிக்கான ஆணை வழங்குவதற்காக தமிழக முதல்-அமைச்சர் விஜய் நாளை (வெள்ளிக்கிழமை) கரூருக்கு செல்கிறார். தொடர்ந்து அவர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

உற்சாக வரவேற்பு

முன்னதாக அவர் காலை 11 மணிக்கு விமானம் மூலம் திருச்சி செல்கிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு கரூர் செல்கிறார். அப்போது வழிநெடுகிலும் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து அவர் கரூர்- சேலம் பைபாஸ் சாலையில் உள்ள அட்லஸ் கலையரங்க மைதானத்தில் நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதற்காக கலையரங்க மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

இதனைத்தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் விஜய் அங்கிருந்து புறப்பட்டு அரசு சுற்றுலா மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்க உள்ளார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.

இதில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பயனாளிகளுக்கு அரசு பணிக்கான ஆணை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

32 நபர்களுக்கு அரசுப்பணி

இதன்படி பல்வேறு அரசுத்துறையின் கீழ் பணியாற்றும் வகையில் 32 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார். மேலும் ரூ.1,700 கோடி மதிப்பீட்டில் தோல் அல்லாத (Non-Leather) காலணிகளை உற்பத்தி செய்யும் புதிய தனியார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த தொழிற்சாலையின் மூலம் சுமார் 13,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்த பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு சென்று சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

போலீசார் பாதுகாப்பு

முதல்-அமைச்சர் வருகையையொட்டி கரூரில் 6,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முதல்-அமைச்சரின் வாகனம் செல்லும் வழி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக அமைச்சர்களான ஆனந்த் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, சமீபத்தில் த.வெ.க.வில் இணைந்த சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் உடனிருந்தனர்.

அடையாள அட்டை

தமிழக முதல்-அமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக்கழக தலைவரான விஜய் நாளை கரூர் வரவிருக்கும் நிலையில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான கியூ.ஆர். கோடுடன் கூடிய அடையாள அட்டை கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது. 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில், கட்சி நிர்வாகிகள் சார்பில் இந்த அடையாள அட்டைகள் வினியோகிக்கப்பட்டு உள்ளன.

பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறையை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com