அரசு ஊழியர்களை தற்செயல் விடுப்பு எடுக்க வற்புறுத்தினால் நடவடிக்கை.. தலைமைச்செயலாளர் எச்சரிக்கை

அரசு ஊழியர்களின் வருகையை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு, தலைமைச்செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை,
தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் கலெக்டர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி சில அரசு ஊழியர் சங்கங்களின் உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக 11-ந் தேதி (இன்று) ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுக்கப்போவதாக தீர்மானித்துள்ளது தெரிகிறது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க விதிப்படி, எந்தவொரு சங்கமும் தங்களது உறுப்பினர்களை ஒட்டு மொத்தமாக தற்செயல் விடுப்பு எடுக்க வற்புறுத்தக்கூடாது.
இதனை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்கள் வருகையை உறுதி செய்யும் வகையில் அவர்களது வருகையை பதிவு செய்து அதுதொடர்பான பதிவேட்டை காலை 10.30 மணிக்குள் சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள் மற்றும் கலெக்டர்களுக்கு துறைகளின் பிரிவு அதிகாரிகள் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








