

ஈரோடு,
அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து கருத்துகள் பெறப்பட்டு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் முடிவை அறிவிப்பார் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்த நிலையில், ஈரோட்டில் இன்று அமைச்சர் ராஜ்மோகன் இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
“தமிழகத்தில் கல்வி புரட்சியோடு உணவு புரட்சியும் கலந்தே வந்துள்ளது. அந்த வகையில் எனக்கு ஒரு ஆசை இருந்தது. அதன்படி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் விஜய்யிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இது பரிசீலனையில் உள்ளது. சைவம் சாப்பிடுபவர்கள் சைவம் சாப்பிடட்டும். அசைவம் சாப்பிடும் குழந்தைகள் சிக்கன் பிரியாணி சாப்பிடட்டும். குழந்தைகளுக்கு புரதம் தேவை. சிக்கன் பிரியாணி சாப்பிட்டால் குழந்தைகள் கெட்டுப் போகாது. இந்த விஷயத்தில் அரசியலை திணிக்க வேண்டாம்.”
இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.