

சென்னை,
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 5-ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 6-ந் தேதியும் தொடங்கின. மொத்தம் 3,119 மையங்களில் பொதுத்தேர்வு நடக்கிறது. இந்த தேர்வினை 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர் எழுதுகிறார்கள். இதில், மாணவர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 பேரும் அடங்குவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக பொதுத்தேர்வுக்கு வராத மாணவர்களின் எண்ணிக்கை 6 முதல் 7 சதவீதம் வரை இருக்கும். உடல்நிலை பாதிப்பு, விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவர்களால் தேர்வு எழுத முடியாத சூழல் உருவாகும்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற தேர்வில் 31,403 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இன்று நடைபெற்ற தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 4 மாணவர்கள் பிடிபட்டதாகவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.