வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் குடுவை கண்டெடுப்பு

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் குடுவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சுடுமண் முத்திரை, கண்ணாடி மணிகள், மண் குடுவை, மண்பாண்ட பாத்திரங்கள் உள்பட 3,200-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.
இந்த நிலையில், வெம்பக்கோட்டை அகழாய்வில் கூடுதலாக சுடுமண்ணால் செய்யப்பட்ட மனித உருவ பொம்மையின் கால் பகுதி சிதைந்த நிலையில் கிடைத்துள்ளது. சிறுவர்கள் விளையாட பயன்படுத்தும் சிறிய அளவிலான மண்குடுவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளை நிற சங்கு வளையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் கூறுகையில், தொல் பொருட்களை ஆவணப்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அகழாய்வு முழுமையாக முடிவடைந்த 8 குழிகள் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள 8 குழிகளை பிற மாவட்டங்களில் இருந்து கல்லூரி, பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள், பார்வையிட வருவதால் மூடப்படாமல் உள்ளது. விரைவில் கூடுதலாக அகழாய்வு குழிகள் தோண்டப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.