

சென்னை,
நாடு முழுவதும் இன்று 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக மு.க.ஸ்டாலின் இன்று கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். பின்னர் கோட்டை கொத்தளத்துக்கு வருகை தரும் முதல்-அமைச்சர், அங்கிருந்தபடி மூவர்ண தேசியக்கொடியை காலை 9 மணிக்கு முதல்-அமைச்சர் ஏற்றி வைப்பார். மூவர்ண பலூன்கள் அப்போது பறக்கவிடப்படும்.
அதைத்தொடர்ந்து சுதந்திர தின உரையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்தபடி நிகழ்த்துவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்களின் வாரிசுகளுக்கான அறிவிப்பை அவர் வெளியிடுவார். அதன் பின்னர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்-அமைச்சரின் நல் ஆளுமை விருது (5 பேர்) போன்ற பல விருதுகள் வழங்கப்படும்.
தற்போது கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இந்த விழாவில் மூத்த குடிமக்கள், பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக்குழந்தைகள் நேரில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவை டி.வி.யில் கண்டு மகிழுங்கள் என்று அனைவருக்கும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை கோட்டை பகுதியில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகர் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.