கூட்டுறவு சங்க ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்

விவசாய உபகரணங்கள் வாங்க கட்டாயப்படுத்துவதை கண்டித்து சேலத்தில் 2-வது நாளாக விடுமுறை எடுத்து கூட்டுறவு சங்க ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டுறவு சங்க ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்
Published on

விவசாய உபகரணங்கள் வாங்க கட்டாயப்படுத்துவதை கண்டித்து சேலத்தில் 2-வது நாளாக விடுமுறை எடுத்து கூட்டுறவு சங்க ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிதி நெருக்கடி

விவசாய உபகரணங்கள் வாங்க கட்டாயப்படுத்துவதை கண்டித்து சேலத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து 2-வது நாளாக விடுமுறை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 654 பேர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாவட்ட துணைத்தலைவர் குமார், செயலாளர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கூறியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இதன்மூலம் கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு தேவையான கடன் உதவிகள் வழங்கி வருகிறோம். இந்த நிலையில் அரசு தள்ளுபடி அறிவிப்பால் கூட்டுறவு சங்கங்கள் நிதி நெருக்கடியில் உள்ளது.

விவசாய உபகரணங்கள்

கூட்டுறவு சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம், உள் கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் நெல்கதிர் அடிக்கும் எந்திரம், மருந்து தெளிக்கும் எந்திரம் உள்ளிட்ட விவசாய உபகரணங்கள் கட்டாயம் வாங்கி அதை விவசாயிகளுக்கு வாடகைக்கு விட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் போது புதிய கருவிகள் வாங்க சாத்தியம் இல்லை.

எனவே இந்த திட்டத்தை கண்டித்தும், திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் ஏற்கனவே வாங்கி பயன்படாமல் உள்ள கருவிகளை கூட்டுறவு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டு தொடர் விடுமுறை எடுத்து போராட்டம் நடத்தி வருகிறோம். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com