

சென்னை
வடசென்னை எண்ணூர் அனல் மின்நிலையத்தில் 2வது அலகை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் நிலக்கரி இருப்பு சரிபார்க்கப்பட்டது. அப்படி சரிபார்க்கபட்டதில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் மட்டும் 2.38 லட்சம் டன் நிலக்கரி பதிவேட்டில் உள்ளதற்கும், இருப்பில் உள்ளதற்கும் வித்தியாசம் உள்ளது.
அதாவது, 2.38 லட்சம் டன் நிலக்கரி இருப்பில் இல்லாமல் பதிவேட்டில் மட்டும் உள்ளது. இந்த பதிவேட்டு முறை நடப்பு ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை எடுக்கப்பட்டது.இருப்பில் இல்லாத நிலக்கரியின் மதிப்பு ரூ.85 கோடி ஆகும். நிலக்கரி காணாமல் போன விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். எனவே இந்த தவறில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது என கூறினார்.
இதற்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:
யார் தவறு செய்து இருந்தாலும் நடவடிக்கை எடுத்தால் வரவவேற்பேன்.
அ.தி.மு.க அரசு எடுத்த கணக்கைதான் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியிலேயே 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை என கணக்கெடுத்தோம். எனக்கு மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை.
கடந்த அ.தி.மு.க அரசை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லி இருக்கிறார்.
மானிய கோரிக்கையின் போது வாய்ப்பளித்தால் சட்டசபையில் விளக்கம் அளிக்க தயார் என கூறினார்.