சேவல் சண்டை; ஒருவர் கைது

சேவல் சண்டை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சேவல் சண்டை; ஒருவர் கைது
Published on

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் மகிமைபுரத்தில் உள்ள ஒரு பள்ளியின் பின்புறத்திற்கு சென்றபோது, அங்கு வாலிபர்கள் சிலர் சேவல் சண்டையில் ஈடுபடுவதை பார்த்த போலீசார், அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது இளைஞர்கள், தாங்கள் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள்களை அதே இடத்தில் போட்டுவிட்டு சேவலுடன் தோப்புக்குள் நுழைந்து தப்பி ஓடிவிட்டனர்.

அவர்களை துரத்திச்சென்றபோது போலீசாரிடம் ஒருவர் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், தண்டலை கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளையராஜா(வயது 37) என்பது தெரியவந்தது. மேலும் தப்பி ஓடியவர்கள் தண்டலை கிராமத்தை சேர்ந்த தெய்வசிகாமணியின் மகன் வினோத், சங்கர் மகன் அஜித், சேகர் மகன் விமல் என்பது தெரியவந்தது. இதையடுத்து வாலிபர்கள் விட்டுச்சென்ற 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார், இளையராஜாவை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com