

கோவை,
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி முறையில் 2024-2026 ஆண்டு பிரிவில் சேர்ந்த மாணவர்கள் இந்த வருடம் தங்களது இரண்டு வருட படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆனால் பாரதியார் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குளறுபடியால் குறிப்பாக சரியான நேரத்தில் முறையாக பாடம் மற்றும் தேர்வு நடத்தாததால் மாணவர்கள் தங்கள் படிப்பை இந்தாண்டு முடிக்கவில்லை. இந்த இரண்டு ஆண்டில் நான்கு கல்வி பருவத் தேர்வுகள் நடத்தப்பட்டு இருக்க வேண்டும் ஆனால் தற்போது வரை இரண்டு கல்வி பருவ தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன.
இதனால் அவர்கள் மூன்றாம் ஆண்டு படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இரண்டு ஆண்டு பட்டப்படிப்பை மூன்றாண்டு ஆண்டு வரை கொண்டு சென்றதால் மாணவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் அவர்களது ஒரு வருடம் வீணாகி உள்ளது என கவலை அடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.