கோவை சிறுமி படுகொலை: புதிய அரசு இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை ஒடுக்க வேண்டும் - ஸ்ரீகாந்தி ராமதாஸ்

சட்டத்தின் சந்துபொந்துகளும், அரசின் மெத்தனப் போக்குமே குற்றவாளிகளுக்குத் துணிச்சலைத் தருகின்றன என ஸ்ரீகாந்தி ராமதாஸ் கூறினார்.
கோவை சிறுமி படுகொலை: புதிய அரசு இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை ஒடுக்க வேண்டும் - ஸ்ரீகாந்தி ராமதாஸ்
Published on

சென்னை,

பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கோயம்புத்தூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. அக்குழந்தையை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இத்தருணத்தில் வலியுறுத்துகிறேன்.

கடந்த காலங்களில் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கிய டெல்லி நிர்பயா சம்பவம், கதுவா, உன்னாவ் நிகழ்வுகள் மற்றும் தமிழகத்தின் பொள்ளாச்சி விவகாரம் வரை வரலாறு நமக்கு உணர்த்துவது ஒன்றைத்தான்; குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதில் ஏற்படும் காலதாமதமே, அடுத்தடுத்து குற்றங்கள் அரங்கேறக் காரணமாக அமைகிறது. சட்டத்தின் சந்துபொந்துகளும், அரசின் மெத்தனப் போக்குமே குற்றவாளிகளுக்குத் துணிச்சலைத் தருகின்றன.

எனவே, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இந்த அரசு வெறும் கண்டன அறிக்கைகளோடு நின்றுவிடாமல், இரும்புக்கரம் கொண்டு இத்தகைய வன்மங்களை ஒடுக்க வேண்டும். இந்த வழக்கை அதிவிரைவு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி, 30 நாட்களுக்குள் குற்றவாளிக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும். மேலும், புதிய திட்டங்கள் மூலம் பெண்கள் பாதுகாப்பிற்கான 24 மணி நேர நடமாடும் நவீன சிசிடிவி கண்காணிப்புப் பொறிமுறை, பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்குக் கட்டாயத் தற்காப்புக் கலைப் பயிற்சி மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றவாளிகளைக் கண்காணிக்கப் பிரத்தியேக தரவுத்தளம் (Sex Offenders Registry) ஆகியவற்றை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும்.

தமிழகத்தில் இனி ஒரு சிறுமிக்குக் கூட இதுபோன்ற கொடூரம் நிகழக் கூடாது. புதிய அரசு இந்தச் சம்பவத்தைத் தீர்க்கமான எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையை விரைந்து பெற்றுத்தர வேண்டும்; இல்லையெனில், எனது தலைமையில் மக்களின் பாதுகாப்பிற்காக வீதிக்கு இறங்கிப் போராட்டம் நடத்த பா.ம.க தயங்காது என எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com