சின்னமலையில் மரத்தில் கார் மோதி கோவை தொழில் அதிபர் பலி - நண்பர் படுகாயம்

மரத்தில் கார் மோதி கோவையை சேர்ந்த தொழில் அதிபர் பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
சின்னமலையில் மரத்தில் கார் மோதி கோவை தொழில் அதிபர் பலி - நண்பர் படுகாயம்
Published on

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் விஷ்ணுராம் (வயது 32). தொழில் அதிபரான இவர், சொகுசு கார்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவருடைய நண்பர் திலீபன் (33). இவர், கோவையில் ஆயில் மில் நடத்தி வருகிறார்.

நண்பர்கள் இருவரும் தொழில் விஷயமாக காரில் சென்னை வந்தனர். காரை விஷ்ணுராம் ஓட்டினார். நேற்று அதிகாலை கிண்டி சின்னமலையில் உள்ள சைதாப்பேட்டை கோர்ட்டு சாலையில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்புகளை உடைத்து அருகில் உள்ள மரத்தில் மோதியது.

இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. படுகாயம் அடைந்த விஷ்ணுராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடன் பயணித்த நண்பர் திலீபன் படுகாயம் அடைந்தார். அவர், தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மரத்தில் கார் மோதியபோது முன்பகுதியில் பாதுகாப்புக்காக இருந்த பலூன் விரிந்துள்ளது. ஆனாலும் காரை ஓட்டிச்சென்ற விஷ்ணுராம் பலியாகி விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் அகிலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விஷ்ணு ராம் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com