

கோவை,
கோவை மாவட்டம், தடாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு குடியிருப்பு பகுதியில் ஒடிசாவை சேர்ந்த நபர் ஒருவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். அந்த வீட்டின் தோட்டத்தில் அவர் கஞ்சா செடிகள் வளர்ப்பதாக தடாகம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அந்த ஒடிசா நபரின் வீட்டுக்கு சென்று, வீட்டின் பின்புறம் உள்ள காய்கறி தோட்டத்தில் ஆய்வு செய்தனர். அப்போது தோட்டத்தில் காய்கறி செடிகளுக்கு நடுவே 7 அடி உயரத்தில் 1.445 கிலோ எடையுள்ள 2 கஞ்சா செடிகள் வளர்ந்து இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் ஒடிசா மாநிலம், பத்ராக் மாவட்டத்தைச் சேர்ந்த மாதபானந்தா ஜெனா (வயது 46) என்பதும், அவர் கடந்த 27 ஆண்டுகளாக கோவையில் தங்கி, கட்டுமான துறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த கஞ்சா செடிகளை பறிமுதல் செய்ததோடு, சட்டத்திற்கு புறம்பாக வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா வளர்த்த அந்த ஒடிசா தொழிலாளியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.