

கோவை,
தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தாரணிகா மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
மாணவிக்கு ஏற்கனவே உடல்நலக் குறைபாடு இருந்ததாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவிக்கும் நிலையில், தங்களது மகள் நல்ல உடல்நலத்துடன் இருந்ததாக பெற்றோர் கூறுவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
எனவே, காவல்துறை வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொண்டு மாணவியின் மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து, அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும்.
மேலும், விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்கி, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
உயிரிழந்த மாணவி தாரணிகாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.