ஆராய்ச்சி மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு டிசம்பர் 2ல் கல்லூரி திறப்பு - தமிழக அரசு அறிவிப்பு

ஆராய்ச்சி மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு மட்டும் டிசம்பர் 2ல் கல்லூரி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆராய்ச்சி மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு டிசம்பர் 2ல் கல்லூரி திறப்பு - தமிழக அரசு அறிவிப்பு
Published on

சென்னை,

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை பள்ளி, கல்லூரிகள் எதுவும் திறக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

அதன்படி வரும் நவம்பர் 16 தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தமிழகத்தில் தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்று முழுவதுமாக குறையாத நிலையில் பள்ளிகளை திறப்பது குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை தொடர்ந்து பள்ளிகளை திறப்பது குறித்து தமிழகம் முழுவதும் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் பள்ளிகளை திறப்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இந்த நிலையில் சற்று முன்னர் தமிழகத்தில் வரும் 16ம் தேதி பள்ளிகள் திறப்பு இல்லை என தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பள்ளிகளை திறப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அனைத்து ஆராய்ச்சி மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு மட்டும் டிசம்பர் 2 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com