தனியார் பஸ் மோதி தந்தை கண்முன்னே கல்லூரி மாணவி உயிரிழப்பு

விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் துர்கா தேவி உயிரிழந்தார்.
துர்கா தேவி
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை செய்யாறு சாலையில் பைக் மீது தனியார் பஸ் மோதி தந்தை கண்முன்னே கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

விபத்து

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் துர்கா தேவி . இவர் செய்யாறு பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். வழக்கம்போல இன்று (சனிக்கிழமை) காலை அவர் தனது தந்தையுடன் பைக்கில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது செய்யாறு அருகே உள்ள ஒரு சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக அவர்களது பைக் மீது பலமாக மோதியது.

தந்தை கண்முன்னே நேர்ந்த சோகம்

அந்த பயங்கர விபத்தில் துர்கா தேவி பைக்கிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவர் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தந்தை சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். எனினும், தனது கண்முன்னே மகள் உயிரிழந்ததைக் கண்டு அவர் கதறி அழுதது அங்கிருந்தோரை சோகத்தில் ஆழ்த்தியது.

போலீசார் விசாரணை

விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com