வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: உணவகங்களுக்கு மின் கட்டணத்தில் சலுகை.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு

விறகு எரிப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்அனுமதி பெறத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: உணவகங்களுக்கு மின் கட்டணத்தில் சலுகை.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Published on

சென்னை,

கேஸ் சிலிண்டர் பிரச்சனையை எதிர்கொள்வது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இன்னும் 10 நாட்களுக்கு தமிழகத்தில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் கையில் இருப்பதாக ஆலோசனையின் போது அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் சென்னையில் மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “அனைத்து உணவகங்களுக்கும் மின்சார கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை வழங்கப்படும். வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் தட்டுப்பாடு நீங்கும் வரை மின்சார பயன்பாட்டிற்கான சலுகை தொடரும். டீ கடைகள், வீட்டில் உணவு தயாரித்து விற்பவர்களுக்கும் இச்சலுகை பொருந்தும்.

விறகு எரிப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்அனுமதி பெறத் தேவையில்லை. விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்களை உழவர் சந்தைகளில் கட்டுப்பாடின்றி விற்கலாம்” என்று அவர் கூறினார்.

முன்னதாக இன்று (14.03.2026) தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் தலைமையில் சம்பந்தப்பட்ட அரசு துறையின் உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்பட்டு, முதல்-அமைச்சர் அவர்களால் பின்வருமாறு ஆணையிடப்பட்டுள்ளது.

உணவகங்கள், டீக்கடைகள், கிளவுட் கிச்சன் உள்ளிட்ட உணவு உற்பத்தி தொழிற்கூடங்கள் எரிவாயுவிற்கு (LPG) பதிலாக மின்அடுப்புகளை பயன்படுத்தும் போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்விற்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ.2 மானியம் வழங்கப்படும். மத்திய அரசு அறிவித்துள்ள வணிக எரிவாயு பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் காலம் வரை இந்த மானியம் வழங்கப்படும்

Also Read
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி கோமா நிலையில் உள்ளாரா?
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: உணவகங்களுக்கு மின் கட்டணத்தில் சலுகை.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு

எரிவாயு (LPG) பயன்படுத்தும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் மின் அடுப்புகள் மின் சூடேற்றிகள் உள்ளிட்ட மின் உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (UYEGP) கீழ், 25 சதவிகிதம் / அதிகபட்சமாக 3.75 லட்சம் ரூபாய் மானியத்துடன் கடன் வழங்கவும், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 25 சதவிகிதம் / 2 லட்சம் ரூபாய் மானியத்துடன் 10 இலட்சம் ரூபாய் வரை கடன் வழங்கவும் மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 35 சதவிகிதம் / அதிகபட்சமாக 1 கோடி ரூபாய் வரை மானியத்துடனும் கடன் வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 60,698 தொழிற்சாலைகள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இசைவாணையினை பெற்று, LPG, CNG, டீசல், பர்னஸ் ஆயில், விறகு போன்றவற்றை எரிப்பொருளாக பயன்படுத்தி இயங்கி வருகின்றது. இந்நிறுவனங்கள் LPG, CNG போன்ற எரிபொருட்களுக்கு மாற்றாக மண்ணென்ணை, RDF, HSD, பயோமாஸ் போன்றவற்றை எரிபொருளாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், இதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இசைவாணை (CTE/CTO) பெற தேவையில்லை, தகவல் தெரிவித்தால் மட்டும் போதுமானது எனவும், மத்திய அரசு அறிவித்துள்ள LPG, CNG பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் கால அவகாசம் வரை இந்த விலக்கு அமலில் இருக்கும் எனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 9,300 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக நாள் ஒன்றுக்கு 55 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து கையாளும் திறன் உள்ளது. இந்த இடர்பாட்டினால் மீதமாகும் தேவைக்கு அதிகமான பாலினை பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ஆவின் பால் கூட்டுறவு சங்கங்களில் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க ஆணையிடப்பட்டுள்ளது.

Also Read
17-ல் 10 உங்களுக்கு.. 7 எங்களுக்கு..: காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. வைத்த புதிய 'செக்'!
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: உணவகங்களுக்கு மின் கட்டணத்தில் சலுகை.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு

எரிவாயு (LPG) பற்றாக்குறையால் உணவகங்கள் மூடப்படும் வேளையில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் காய்கறி விற்பனை பாதிக்கப்படலாம். விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு விவசாயிகளை தாங்கள் விளைவித்த காய்கறிகள் மற்றும் பழங்களை இடர்பாடின்றியும், 194 உழவர் சந்தைகளில் எவ்வித கட்டுப்பாடு இல்லாமல் விற்பனை செய்ய அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.

மேலும், மாநில அளவில் வணிக நிறுவனங்களுக்கு முறையாக LPG சிலிண்டர் அளவீட்டினை ஒதுக்கீடு செய்து கண்காணிக்க தலைமைச் செயலாளர் அவர்கள் கண்காணிப்பில் அரசு உயர் அலுவலர்கள் கொண்ட குழு செயல்படவும், இதேபோன்று மாவட்ட அளவில் எண்ணெய் விநியோக நிறுவனங்களின் பொறுப்பு அலுவலர்களை உள்ளடக்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான குழு கண்காணிக்கவும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களால் ஆணையிடப்பட்டுள்ளது.

இத்துடன், இந்த மாதம் பொது விநியோக திட்டத்திற்கு கூடுதலாக 3228 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com