கள்ளக்குறிச்சி மாணவியின் 2 உடற்கூராய்வு முடிவுகளையும் ஆய்வு செய்ய குழு அமைப்பு

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் 2 உடற்கூராய்வு முடிவுகளையும் ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவியின் 2 உடற்கூராய்வு முடிவுகளையும் ஆய்வு செய்ய குழு அமைப்பு
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் சாவு குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 300-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் 2 உடற்கூராய்வு முடிவுகளையும் ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஜிப்மர் மருத்துவர்கள் கொண்ட ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வு செய்வதற்காக 2 உடற்கூராய்வு அறிக்கைகளை சிபிசிஐடி போலீஸ் ஒப்படைத்தது.

இந்த குழுவில் ஜிப்மர் தடயவியல் துறை பேராசிரியர்கள் குஷ குமார் சாஹா, சித்தார்த் தாஸ், அம்பிகா பிரசாத் பத்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஒரு மாதத்தில் ஜிப்மர் குழு தனது அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதன்பின்னர் உடற்கூறாய்வின் அறிக்கைகளை கேட்டு அந்த நீதிமன்றத்தில் உரிய மனுவை மனுதாரர் தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com