

பெண் குழந்தை
செங்கல்பட்டு மாவட்டம் கொடூர் பகுதியை சேர்ந்தவர் துரை (வயது 30). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயஸ்ரீ (28) என்ற பெண்ணுடன் திருமணமானது. இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கர்ப்பமானார். இதையடுத்து ஜெயஸ்ரீ கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் ஜெயஸ்ரீக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 9-ந்தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
கை உடைந்து பிறந்ததாக புகார்
இதையடுத்து ஜெயஸ்ரீக்கு கடந்த செவ்வாய்கிழமை அன்று சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. அப்போது பிரசவத்தின்போது குழந்தையின் இடது கை உடைந்து பிறந்ததாகவும், வலது கை செயலிழந்த நிலையில் காணப்படுவதாகவும், 3 நாட்களாக தொடர்ந்து தலையில் இருந்து ரத்தம் கசிந்து வருவதாக டாக்டர்களிடம் ஜெயஸ்ரீ தெரிவித்து உள்ளனர். ஆனால் டாக்டர்கள் தரப்பில் சரியான பதில் ஏதும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஜெயஸ்ரீயின் உறவினர்கள் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், தவறு செய்த டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும் புகார் அளித்தனர்.